Friday, May 21, 2010

New Political Party IJK started By Dr.T.R.Pachamuthu


2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் மே மாதம் 29 இல் முதல் மாநாடு -வேந்தர் அறிவிப்பு

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்கினார். இந்த கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சி உதயம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து புதியதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சிக்கு இந்திய ஜனநாயக கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் நிறுவன தலைவர் டி.ஆர்.பச்சமுத்து கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு சேவை செய்தால் உண்மையான மன நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கட்சியை தொடங்கி உள்ளேன். நான் பிறந்த சமுதாய மக்களுக்காக சேவை செய்ய பாரி நற்பணி மன்றம் என்ற சேவை மையத்தை தொடங்கி ஒருவருடம் ஆகிறது. இந்த மன்றத்தின் மூலமாக ஏழை மக்களுக்காகவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் பல உதவிகளை செய்துள்ளேன். பாரி நற்பணி மன்றத்தில் 3 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பாரி நற்பணி மன்றம் இன்று அரசியல் கட்சியாக உதயமாகிறது.

கொடி அறிமுகம்

இந்த கட்சி முறையாக தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்யப்பட்டு இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் மட்டும் அல்லாமல் தேசிய கட்சியாவதற்கும் முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா மாநிலத்திலும் எங்கள் கட்சியில் சேர இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எங்கள் கட்சியின் கொடியின் மேல் பகுதி சிவப்பு நிறத்திலும், நடுப்பகுதி வெள்ளை நிறத்திலும், கீழ்பகுதி சிவப்பு நிறத்திலும் உள்ளது. மேல் பகுதியின் சிவப்பு நிறம் தியாகத்தையும், வெள்ளை நிறம் அமைதியையும், கீழ் பகுதியில் உள்ள சிகப்புநிறம் புரட்சியையும் குறிக்கிறது.

நாளைக்கே ஆட்சியைப் பிடித்து பெரிய தலைவர் ஆகவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது. 2011-ம் ஆண்டு நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவோம். எங்கள் சக்தியையும், எங்கள் கொள்கைகளையும் மதித்து கூட்டணிக்காக அழைத்தால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.

நான் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தேர்தலில் போட்டியிடமாட்டேன். மேலும் எந்த பதவியும் வகிக்கமாட்டேன்.

முதல் மாநாடு

இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள். இந்த கட்சியின் தலைவராக கோவை தம்பி, பொதுச்செயலாளராக ஜெயசீலன், பொருளாளராக வழக்கறிஞர் ராஜன், அகில இந்திய இளைஞர் அணி அமைப்பு செயலாளராக மதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியில் சேரவேண்டும் என்றால் முதலில் பாரி நற்பணி மன்றத்தில் சேரவேண்டும். பின்புதான் கட்சியில் உறுப்பினராக சேரமுடியும். எங்கள் கட்சியின் கொள்கை அனைவருக்கும் உயர்கல்வியும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என்பதாகும்.

இவ்வாறு டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.